அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு; தாமாக முன் வந்து எடுத்த வழக்குகளின் நீதிபதி மாற்றம்!

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்குகளை இனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒரு  முறை நீதிபதிகள் மாற்றப்படுவர். அதன்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரை மதுரைக் கிளையில் வழக்குகளை விசாரிக்க உள்ள நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரையில் உள்ள நீதிபதிகள் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த மூன்று மாதங்களுக்கு எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளதால் இனி, இந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளார்.

இதையும் படிக்க: "நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள்" நீதிபதிகள் அதிருப்தி!