ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளை சம்பவம்... தொடரும் விசாரணை!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளை சம்பவம்... தொடரும் விசாரணை!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த பணியாளர் ஈஸ்வரிக்கு இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை போயஸ் கார்டனை சேர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.  தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வீட்டின் லாக்கரில் வைத்திருந்த கோடிக்கணக்கில் மதிப்பிலான தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு மூன்று வீடுகள் மாறிய நிலையில், எந்த வீட்டிலிருந்து நகைகள் திருடப்பட்டது என தெரியவில்லை என புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து வங்கி கணக்குகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி முக்கிய நபரான ஐஸ்வர்யா வீட்டின் பணியாளர் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 30 கிராம் வைர நகைகள், திருடிய நகைகளில் வாங்கப்பட்ட 1கோடி மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் இருந்து எவ்வளவு நகைகள் திருடுப்போனது என முறையான கணக்குகள் போலீசாரிடம் தெரிவிக்காததால் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவரது தங்கை திருமண நிகழ்வின் போது எடுத்த புகைப்படம் மற்றும் நகைகள் அணிந்திருந்த புகைப்படத்தை வாங்கி போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மீதமுள்ள நகைகளை மீட்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை விசாரிக்க மூன்று நாட்கள் போலீஸ் காவல் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தேனாம்பேட்டை போலீசார் மனு தாக்கல் செய்தனர்.  மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தின் 18வது எம்.எம் கோர்ட்டில் நடந்ததால் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை போலீசார் மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியன் முன்பு ஆஜர்படுத்தினர்.  பின்னர் இந்த மனுவை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியன் அவர்களை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.  

மாஜிஸ்ட்ரேட் விசாரணையின் போது போலீசார் அடிப்பார்கள் எனவும், போலீஸ் காவலில் செல்லமாட்டேன் என ஈஸ்வரி அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.  அதற்கு போலீசார் தாக்கக்கூடாது எனவும் போலீஸ் விசாரணைக்கு ஈஸ்வரி ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் எனவும் மாஜிஸ்ட்ரேட் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் இருவரையும் போலீஸ் பாதுகாப்பாக வாகனத்தில் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துசென்ற போது கேமராவில் முகம் தெரியாதவாறு போலீஸ் மடியில் படுத்தப்படியே இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.  வீட்டில் திருடிய நகைகள் எவ்வளவு? திருடிய மீதமுள்ள நகைகளை எங்கே பதுக்கி வைத்துள்ளனர்? சொத்துக்களாக குவித்துள்ளாரா என்பது தொடர்பாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஈஸ்வரி மீதான குற்றவழக்கு குறித்தும் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  தன்னை எதிர்த்து பேசினால் பழி வாங்குவேன்....!!!