மனைவிக்கு பங்களா வீடு, கள்ளக்காதலியுடன் காரில் சுற்றுலா...சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தொழிலாளி! அலெக்கா தூக்கிய போலீசார்...!!

கன்னியாகுமரியில் போலி நகைகளை அடகு வைத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்த முடி திருத்தும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.  

மனைவிக்கு பங்களா வீடு, கள்ளக்காதலியுடன் காரில் சுற்றுலா...சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தொழிலாளி! அலெக்கா தூக்கிய போலீசார்...!!

கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், சித்திரங்கோடு பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் இவரது கடைக்குச் சென்ற காவியா என்ற பெண், 9 கிராம் எடை கொண்ட வளையல் ஒன்றை 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார். அன்று மாலை கடைக்கு வந்த சுரேஷ், நகைகளை சரிபார்த்தபோது, ஒரு வளையல் போலியானது என தெரியவந்தது. 

தொடர்ந்து, கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, செகுசு காரில் ஒருவருடன் வந்த பெண், போலி வளையலை அடகு வைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கொற்றிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே வேர்கிளம்பி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் நாகர்கோவிலை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான ஜேசுராஜா என்ற அந்நபர், ஆடம்பரமாக வாழ விரும்பி, குறுக்கு வழியில் கோடீஸ்வரனாக திட்டமிட்டது தெரியவந்தது. அதன்படி, தனது கள்ளக்காதலி அனுஷா என்பவருடன் சேர்ந்து, சிறிய நகை அடகு கடைகளை குறி வைத்து, போலி நகைகளை அடகு வைத்து லட்ச கணக்கில் பணம் மோசடி செய்ததும் தெரியவந்தது. 

மேலும், அந்த பணத்தில் மனைவிக்கு 3 மாடி பங்களா வீடு கட்டி கொடுத்தும், கள்ள காதலியுடன் காரில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், ஜேசுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அனுஷாவை தேடி வருகின்றனர்.