முதலமைச்சர் பற்றி அவதூறு; முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன்!

முதலமைச்சர் பற்றி அவதூறு; முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன்!

முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் உத்தரவாத மனு தாக்கல் செய்ததை தொடந்து, அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி கருணாநிதி உட்பட முதல்வரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டு சி.த.செல்லபாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, அரசின் செயல்பாட்டை விமர்சித்ததாகவும், முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்தார். 

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, செல்லபாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:அதிக பயணிகளை ஏற்றி சென்ற ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்!