ஜெபம் செய்தால் இறந்தவர் உயிர்த்தெழுந்துவிடுவார்- தாயின் சடலத்தை விட்டிற்குள் வைத்து மகள்கள் ஜெபம்  

உயிர்த்தெழுந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இறந்த தாயின் உடலை வைத்து மகள்கள் ஜெபம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெபம் செய்தால் இறந்தவர் உயிர்த்தெழுந்துவிடுவார்- தாயின் சடலத்தை விட்டிற்குள் வைத்து மகள்கள் ஜெபம்   

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணமாகாத தனது மகள்கள் ஜெசிந்தா வயது (43), ஜெயந்தி (வயது 40) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத மேரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். தாயை உயிர்ப்பிக்க அவரது உடலை கட்டிலில் கிடத்தி அவரது உடலில் பைபிளை வைத்து மகள்கள் இருவரும் ஜெபம் செய்து வந்துள்ளனர். மேரியை பார்க்க வந்த உறவினர் ஒருவர் மூலம் தாயின் உடலை வைத்துமகள்கள் ஜெபம் செய்யும் தகவல் வெளியே வந்தது.  

இதுகுறித்து ஊர்மக்கள் மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். நேற்று இரவு அவர்களது வீட்டிற்குச் சென்ற போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் தங்களது தாயார் உயிருடன் உள்ளதாகக் கூறி மகள்கள் இருவரும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணிநேரம் போராடி இறந்த மேரியின் உடலை வீட்டிலிருந்து எடுத்துவந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது மேரி இறந்து 7 நாட்கள் ஆகியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததால் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடமும் சகோதரிகள் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் ஒருவழியாக மேரியின் உடல் பிரேதபரிசோதனை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மேரியின் மகள்கள் இருவரையும் ஆறுதல் படுத்தி அவர்களுக்கு கவுன்சிலிங் செய்த போலீசார் இறந்து விட்டதை அவர்களுக்கு புரியவைத்தனர். பின்னர் மேரியின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு சொக்கம்பட்டியில் உள்ள மேரியின் வீட்டின் ஒரு பகுதியிலேயே புதைக்க முடிவு செய்து  சொக்கம்பட்டிக்கு கொண்டு சென்றபோது அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அவரது உடலை ஊர் எல்லைக்குள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானமடைந்தனர். பின்னர் மேரியின் வீட்டின் ஒரு பகுதியில் ஜேசிபி மூலம் குழி தோண்டப்பட்டு பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மேரியின் உடலை சவப்பெட்டியில் வைத்து புதைத்தனர். இறந்த தாயாரை உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையில் மகள்கள் தனது தாயரின் உடலை வைத்து ஜெபம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் போலீசாரும் நேற்று இரவு முதல் சகோதரிகளுக்கு புரியவைக்கமுடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தாயாரின் உடல் புதைக்கப்பட்ட பின்னரே போலீசாரும் நிம்மதியடைந்தனர்.