இபிஎஸ்-ஐ கொடநாடு வழக்கில் தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்காலத் தடை!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து     சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள  நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இ.பி.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜரானார். அப்போது, கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக கூறினார். 

மனநோயால் பாதிக்கப்பட்டதாக கூறிய தனபால் தற்போது இவ்வாறு அவதூறாக பேசிவருதால் அவருக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

இதனையடுத்து, கொடநாடு விவகாரத்தில் இ பி எஸ் குறித்து அவதூறாக தனபால் பேசியதற்கான முகாந்திரம் உள்ளதாக கூறிய நீதிபதி தொடர்ச்சியாக பேசுவதற்கு அனுமதித்தால் அது இ பி எஸ்க்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் எனக்கூறி கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும்,மனு குறித்து தனபால் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிக்க || தலைமுடி வெட்டாததால் திருப்பி அனுப்பிய ஆசிரியர்கள்... தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட மாணவர்!!