முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிறை தண்டனை ரத்து...!

அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைதண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த T.M.செல்வகணபதி, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதேசமயம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து இவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பிற்கு பிறகு, கூட்டுசதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் (குற்றவாளிகள்) தரப்பில், பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் ஒன்றரை ஆண்டிற்கு பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. அதேபோல், புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் விசாரிக்கவில்லை என்றும், உரிய ஆய்வு நடத்தாமல் இருந்த சிபிஐ திடீரென அறிக்கை தாக்கல் செய்ததை சிறப்பு நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டதும், தண்டனை வழங்கியதும் தவறு என்பதால், தீர்ப்பை ரத்து செய்து தங்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையும் படிக்க : ED எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தொடர்ந்து சிபிஐ தரப்பில், மத்திய அரசின் திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு 96 சுடுகாடுகாடுகளுக்கு மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது எனவும், அதிலும் தலா 23 லட்சம் ரூபாய் தொகையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 17 லட்ச ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது என வாதிடப்பட்டது. எனவே சிறப்பு நீதிமன்ற தண்டனையை உறுதிசெய்வதுடன், கூட்டுச்சதி குற்றச்சாட்டிலும் அனைவரையும் தண்டிக்க வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் 9ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். 

இந்நிலையில், அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் 23 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைதண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.