கள்ளக் காதல் வீட்டிற்கு தெரிந்ததால் மாயமான ஜோடி...! பருவதமலையில் தூக்கிட்டு தற்கொலை ...அழுகிய நிலையில் சடலம் மீட்பு

கள்ளக் காதல் வீட்டிற்கு தெரிந்ததால் மாயமான ஜோடி...! பருவதமலையில் தூக்கிட்டு தற்கொலை ...அழுகிய நிலையில் சடலம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் கள்ளக் காதல் ஜோடி  ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவதமலை ஏறும் வழியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் ஒரு மரத்தில் ஆணும், பெண்ணும் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரின்  சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, அவர்கள் தூக்கிட்ட இடத்தில் போலீசார்  சோதனை செய்த போது  ஆதார் அட்டை சிக்கியுள்ளது. பின்னர் அதை வைத்து நடத்திய விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் தேவி என்பது உறுதியானது.

மேலும் ராஜசேகர்  நடத்தி வந்த பிரிண்டிங் பிரஸில் தேவி பணிபுரிந்து கொண்டிருந்ததும், அதற்கிடையே இருவருக்கும்  கள்ளத்தொடர்பு ஏற்பட்டு,  இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததும் தெரியவந்தது. இதையறிந்த ராஜசேகரன் மனைவியும், தேவியின் குடும்பத்தாரும் கண்டித்ததால், இருவரும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.