மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!

பெற்ற மகனையே கொன்ற தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம்,  தக்கோலம் அடுத்த கணபதிபுரம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முனியப்பன்(40) இவர் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் காஞ்சிபுரம் அடுத்த போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராதா(34) என்பவருக்கும் திருமணமாகி தீபக்(7) ரூபன்(3.1/2) என இரண்டு மகன்கள் உள்ளனர்..

இந்த நிலையில் முனியப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராதா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் தீபக், ரூபன் ஆகிய இரண்டு பேரும் முனியப்பனுடைய தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தனர். கடந்த 29.06.2018 அன்று தனது மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவி ராதாவிடம் தன்னுடன் வாழ அழைத்துள்ளார்.

ஆனால் ராதா வர மறுத்துள்ளார். பின்னர் மறுநாள் 30.06.2018 அன்று முனியப்பன் கணபதிபுரத்திற்கு வந்து தனது மகன்களிடம் உனது தாய் என்னுடன் வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடரந்து முனியப்பன் தனது மகன்களிடம் நீச்சல் சொல்லி தருகிறேன் என கூறி அதே பகுதியில்  உள்ள தனியாருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றிற்கு அழைத்து சென்று இளைய மகன் ரூபனை கிணற்றில் தள்ளிவிட்டு, பின்னர் தீபக்கை தூக்கி கிணற்றில் வீசிவிட்டு முனியப்பன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். 

பின்னர், இதில் தீபக் மட்டும் உயிருடன் தப்பி வந்து, நடந்த சம்பவத்தை தீபக் தனது பாட்டி அத்தையிடம் மற்றும் ஊர் பொதுமக்களிடம்  தெரிவித்துள்ளான். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு இன்று மாலை ராணிப்பேட்டை 2-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்  முனியப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து முனியப்பனை போலிசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:பங்காரு அடிகளார் மறைவு; அண்ணாமலை பாதயாத்திரை ரத்து!