போலீசுக்கே தண்ணீர் காட்டிய பெண் கைதி...! வயிறு வலிப்பதாக கூறி மாயம்..! திகைத்து போன போலீசார்..!
வயிற்று வலி என நடித்து மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடிய பெண் கைதியால் போலீசார் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பேரளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி கஸ்தூரி கடந்த சில ஆண்டுகளாகவே சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், 55 வயதாகும் கஸ்தூரியிடம் சாராய விற்பனை தொழிலை கைவிடுமாறு பலமுறை எச்சரித்தும், கண்டித்தும் அவர் திருந்தியது போல் தெரியவில்லை.
இதனிடையே கஸ்தூரியின் சாராய விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த பேரளம் போலீசார் கடந்த 12 ஆம் தேதி கஸ்தூரியை கையும் களவுமாக பிடித்து திருவாரூரில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 23 -ம் தேதி அன்று தனக்கு வயிறு வலிப்பதாக கஸ்தூரி சிறைக்காவலர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கஸ்தூரி மேல் பரிதாபப்பட்ட காவலர்களும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்தனர். நேற்று வரை சிகிச்சை பெற்று வந்த கஸ்தூரி நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார்.
பின்னர் சாராய வியாபாரி கஸ்தூரி மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதை அறிந்த சிறைக்காவலர்கள் கடும் அதிர்ர்சி அடைந்ததோடு, அது தொடர்பான தகவலை மேல் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினர். மேலும் சாராய வியாபாரி கஸ்தூரி போலீஸாருக்கு தண்ணீர் காட்டிவிட்டு தலைமறைவானதால் மீண்டும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வலை வீசி தேடி வருகின்றனர்.
இருப்பினும், போலீசாரால் கைது செய்யப்பட்ட 55 வயது பெண் கைதி ஒருவர் தப்பி ஓடிய நிகழ்வு திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.