நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர்... மனஉளைச்சலில் பூ வியாபாரி தற்கொலை...
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் அலக்கழித்ததால், மனமுடைந்த பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. பூ வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அண்மையில் அவர், சகோதரர்களுக்கான குடும்ப சொத்தை 3 ஆக பிரித்து, பட்டா வழங்க கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனை அணுகியுள்ளார். ஆனால் அவர் பட்டா வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. மேலும் பட்டா கேட்டு பிரபும் சுமார் ஒரு மாத காலம் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு அலைந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தான் அழைக்கப்பட்டதால் மனமுடைந்த பிரபு, ஊத்துகாட்டு எல்லையம்மன் ஆலயம் அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக இதனை முகநூலில் நேரலையில் பதிவும் செய்துள்ளார். அதில் பட்டா வழங்க வி.ஏ.ஓ சீனிவாசன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதியின் கணவர் துரையும் உடந்தையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த வீடியோ பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு அலுவலர் லஞ்சம் கேட்டதால், விரக்தியில் பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டது கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.