சிறுமி பாலியல் வழக்கு.....முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மதுரை ஜெய்ஹிந்த்புரதைச் சேர்ந்தவர் பசீர் அகமது. 65 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சிறுமிக்கு தாய் இல்லை என்பதால் தந்தையின் உறவினரான ஜமூனாதேவி என்பவரது பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். இன்னிலையில் சிறுமி தனக்கு நேர்ந்ததை ஜமுனா தேவியிடம் கூறி உள்ளதாக தெரிகிறது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜமுனா தேவி மதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு போலீசார், பசீர் அகமதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராதிகா தொடர் விசாரணை செய்தார். இதில் குற்றவாளி பசீர் அகமது கான் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்தும் மேலும் ரூபாய் 60 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.