நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு... மர்மநபர்களை விரட்டி பிடித்து வெளுத்தெடுத்த பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சிஎஸ்ஐ கோயில் தெருவை சேர்ந்தவர் புஷ்பலதா. இவர் சாத்தான்குளம் காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல இன்று காலை தனது வீட்டில் இருந்து சாத்தான்குளம் மெயின் பஜார் வழியாக புஷ்பலதா காமராஜர் நகர் சென்று கொண்டிருந்த போது திடீரென்று பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர் புஷ்பலதாவின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பிடித்து இழுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது புஷ்ப லதா கூச்சலிடவே, கோபமடைந்த மர்மநபர் புஷ்பலதாவின் கன்னத்தில் அடித்துவிட்டு அவரிடம் செயினை பறித்துவிட்டு பைக்கில் ஏறி தப்பி சென்றார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.