லஞ்சம் கேட்டதால் பூ வியாபாரி தற்கொலை எதிரொலி... கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்...

ஆரணி அருகே பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் கேட்டதால் பூ வியாபாரி தற்கொலை எதிரொலி... கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்...

திருவண்ணாமலை மாவட்டம் நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி பிரபு, அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருந்ததாகவும், அதற்கு பட்டா வழங்கும்படி விண்ணப்பித்ததில் நீண்ட நாட்களாக அவர் அலைக்கழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

பட்டா வழங்கும் விஷயத்தில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், சர்வேயர் மீது பூ வியாபாரி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், வீடியோவில் பேசிக்கொண்டே குளத்தில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடுக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து, கோட்டாச்சியர் கவிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.