மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவர் கைது...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இரண்டாவது மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த ஓய்வு பெற்ற காவலரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவர் கைது...

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் காவலராக பணிபுரிந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரனுக்கும் அவரது மனைவி மாதுவுக்கும் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையில் மாது தீ குளித்து உயிரிழந்தார்.

அதன்பிறகு அதே கிராமத்தை சேர்ந்த இந்திராகாந்தி என்பவரை மகேஸ்வரன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வினிதா,  சுந்தரேசன்  ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். 
முதல் மனைவி இறந்த பிறகு காவல் பணிக்கு செல்லாமல் இருந்த மகேஸ்வரன் விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி மகேஸ்வரனுக்கும் அவரது இரண்டாவது மனைவி இந்திராகாந்திக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து இந்திராகாந்தி தலையில் கணவர் மகேஸ்வரன் தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க வந்த மகன் சுந்தரேசனையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

படுகாயாமடைந்த இருவரும் தருமபுரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு இந்திராகாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் மகன் சுந்தரேசன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த பாரூர் காவல் நிலைய போலீசார், தலைமறைவாக இருந்த தந்தை மகேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.