சம்பளம் பணம் அனுப்புவதில் தகராறு.. தொழிலாளி கொலை..!

சம்பளம் பணம் அனுப்புவதில் தகராறு.. தொழிலாளி கொலை..!

சின்னமனூரில் வெளிமாநில தொழிலாளியின் வீட்டிற்கு சம்பளம் பணம் அனுப்புவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் உள்ள சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் இரும்பு சேமித்து அரைக்கும் கம்பெனியில் வெளி மாநிலத்தவர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

அங்கு பணிபுரியும் பீகார் மகமுடா பகுதியைச் சேர்ந்த பிரதீப் மான்சி (22), பாப்பு சிங் (44), மற்றும் நிதிஸ்குமார்(25) ஒரே கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான மூன்று பேரும் அங்கு பணிபுரிந்துள்ளனர். மூன்று பேரும் சேர்ந்து சம்பளப் பணத்தை பாப்பு சிங் மூலம் அனுப்பியுள்ளனர்.

இதில் சம்பளப் பணங்களை வீட்டிற்கு அனுப்பியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பாப்பு சிங் மற்றும் நிதீஷ் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து பிரதீப் மான்சியை இரும்பு கம்பியால் அடித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

தகவல் அறிந்த சின்னமனூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பாப்பு சிங் மற்றும் நிதிஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்காக வந்தவரை சின்னமனூரில் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.