புதுச்சேரியில் பெருகி வரும் இணைய வழி மோசடி!

புதுச்சேரியில் பெருகி வரும் இணைய வழி மோசடி!

புதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேரிடம் இணையதளம் மூலம் ரூ.6 லட்சம் பணம் மோசடி நடைபெற்றுள்ளது.

புதுச்சேரியில்  இணையவழி மூலம் வேலை வாங்கி தருவதாகவும், கடன் வாங்கி தருவதாகவும் மர்ம நபர்கள் பணத்தை மோசடி செய்து வருகின்றனர். இதில் புதுச்சேரியை சேர்ந்த பலரும் சிக்கி தவிக்கின்றனர்.  இணையவழி மோசடிகள் குறித்து போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதனை காதில் வாங்காமல் உள்ளனர். இதனிடையே இணையவழி மோசடிக்காரர்கள் தற்போது பெண் ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து ரசித்து வந்துள்ளார். 

அப்போது அவரது செல்போனில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் ஆன்லைனில் அழகிய பெண்களிடம் பேசலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெண் ஆசையால் அந்த வாலிபர் அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கில் சென்றுள்ளார். அப்போது அதில் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கட்டணம் செலுத்தி சென்ற பிறகு அது மோசடி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது அக்கவுண்டில் இருந்த பணமும் எடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து அந்த வாலிபர் சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார். இதேபோல் நேற்று ஒருநாளில் மட்டும் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், வெளிநாட்டில் வேலை, கொரியரில் பொருட்கள் வந்துள்ளது. பேன் கார்டு அப்டேட் என கூறி,  புதுச்சேரியை சேர்ந்த 9  பேரிடம் சுமார்  6லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இணைய வழியில் அதிகலாப முதலீடுகள், வேலைவாய்ப்பு  அல்லது வங்கிகளில் இருந்து, கொரியர்களில் இருந்து வரும் அழைப்புகளையும் உறுதி  செய்யாமல் ஏற்க வேண்டாம் என இணைய வழி  காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிக்க:"பொது சிவில் சட்டம் அவசியமானது" தமிழிசை வாதம்!