பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்...திருப்பூரில் பரபரப்பு!

பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்...திருப்பூரில் பரபரப்பு!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி-சத்யா தம்பதிக்கு, கடந்த 19-ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. பொது வார்டில் தாயும், சேயும் இருந்த நிலையில், அருகே 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறி ஒரு பெண் பேச்சுக் கொடுத்துள்ளார். சத்யாவை வேறு வார்டுக்கு மாற்றும் போது, குழந்தையை அந்த அடையாளம் தெரியாத பெண் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சத்யா திரும்பி வந்து குழந்தையை கேட்ட போது உங்கள் மாமியாரிடம் குழந்தையை கொடுத்ததாக கூறியதால், உள்ளே சென்று பார்த்த போது குழந்தை இல்லாததால் அதிர்ச்சியடைந்த சத்யா, அப்பெண்ணை தேடிய போது அவர் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.  

தகவலறிந்து வந்த போலீசார், மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் அப்பெண் குழந்தையை மடியில் மறைத்தவாறு கடத்தி செல்வது பதிவாகி உள்ளது. அதனடிப்படையில், குழந்தையை கடத்தி சென்ற அப்பெண் யார்? யாருக்காக குழந்தையை கடத்தி செல்கிறார் என்ற பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.