நடிகையின் நிலத்தை மோசடி செய்த புகார்;  குற்றவாளிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 

காரைக்குடி அடுத்த கோட்டையூர் பகுதியில் நடிகை கௌதமிக்குச் சொந்தமான 25 கோடி மதிப்புடைய சொத்தை அழகப்பன் அவரது குடும்பத்தினருடன் இணைந்து மோசடி செய்து விட்டதாகக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். 

அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவருக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினர். மேலும், புகார் குறித்து விளக்கம் அளிக்க ஆஜராகும்படி அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. மேலும், அழக்கப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறு பேரும் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து,  தேடப்படும் அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் இந்திய நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பயணம் செல்வதை அல்லது வெளிநாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com