லாட்டரி அதிபர், மருமகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டு இருப்பதால், லாட்டரி விற்பனையில் மார்ட்டின் என்கிற கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் முக்கிய நபராக இருந்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்து, கடந்த 2009 - 2010 காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. அதனடிப்படையில் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தில் மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. 

இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பல்வேறு கட்டங்களாக லாட்டரி அதிபர் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான கட்டிடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை மொத்தம் 451. 07 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

இந்த நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை கோவையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, கோவையில் உள்ள அவரது நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ss மியூசிக் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அவரது மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனின் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: ரவுடிகள் சுட்டதில் காயமடைந்த போலீசார்; நலம் விசாரித்த டிஜிபி!