குழந்தை தனது சாயலில் இல்லை... 2 மாத குழந்தையை கொன்று ஏரியில் வீசிய கொடூர தந்தை...

ஆந்திராவில், குழந்தை தன்னுடைய சாயலில் இல்லை எனக் கூறி, மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன், 2 மாத பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை தனது சாயலில் இல்லை... 2 மாத குழந்தையை கொன்று ஏரியில் வீசிய கொடூர தந்தை...

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண துர்க்கம் நகரை சேர்ந்த மல்லிகார்ஜுனா - சிட்டம்மா தம்பதிக்கு, 2 மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தை தன்னுடைய சாயலிலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தை சார்ந்த யாருடைய சாயலிலும் இல்லை எனக் கூறி வந்த மல்லிகார்ஜுனா, அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று குழந்தையை அருகில் உள்ள ஏரிக்கரைக்கு எடுத்துச் சென்ற மல்லிகார்ஜுனா, குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒட்டி மூச்சுத்திணறல் ஏற்பட வைத்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை ஒரு பையில் வைத்து, ஏரியில் வீசிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், குழந்தையுடன் கணவர் காணாமல் போனதால் சந்தேகமடைந்த சிட்டம்மா, போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மல்லிகார்ஜுனாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவும், குழந்தை தன்னுடைய சாயலிலும் இல்லை என்பதாலும் கொலை செய்து விட்டதாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.