சிரியா - ஈராக்கை சேர்ந்த பயங்கரவாதிகளுடன் பண பரிவர்த்தனை... கோவை குண்டுவெடிப்பில் சென்னையை சேர்ந்தவர் ஊபா சட்டத்தின் கீழ் கைது

சிரியா - ஈராக்கை சேர்ந்த பயங்கரவாதிகளுடன் பண பரிவர்த்தனை... கோவை குண்டுவெடிப்பில் சென்னையை சேர்ந்தவர் ஊபா சட்டத்தின் கீழ் கைது

சென்னையில் தொடரும் சோதனை

கோவை குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னையில் மீண்டும் 4 இடங்களில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்த பட்டியல்

இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை ஆகியவை வழங்கி ஆதரவாக செயல்பட்டதாக  மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பி உள்ளது. அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது.

மேலும் படிக்க: கொலை குற்றவளிகள் கொண்டாடப்படுவதா..? ஜோதிமணி ஆவேசம்..!

இது தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேரின் வீடுகளில் சென்னை போலீசார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ஊபா சட்டத்தின் கீழ் கைது

இந்நிலையில் இன்று மீண்டும் சென்னை போலீசார் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.  தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு இவர் மீது நிலுவையில் உள்ளது.

அதே போல ஏழு கிணறு தெருவைச் சேர்ந்த தவ்ஃபிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பண பரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

போலி பாஸ்போர்ட், சிம் கார்டுகள் வினியோகம்

மேலும், சென்னை மண்ணடி, சைவ முத்தையா முதலி தெருவைச் சேர்ந்தவரான ஹாரூன் ரஷித், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம் கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல  வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவரான முகமது முஸ்தபா, தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது. 

இவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த திடீர் சோதனையில் தொடர்புடைய நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார், யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.