வித்தியாசமான முறையில் திருட முயன்ற ஆசாமிகள்! ஃபெயிலியரான நியூ ட்டிரிக்...

வேலூரில் சிசிடிவி கேமாரவை திருப்பி வைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம ஆசாமிகள்.

வித்தியாசமான முறையில் திருட முயன்ற ஆசாமிகள்! ஃபெயிலியரான நியூ ட்டிரிக்...

வேலூர் கிரின் சர்க்கிள் அருகே உள்ள மருந்து கடையின் சிசிடிவி கேமாரவை வேறு திசையில் திருப்பி வைத்துவிட்டு பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் கிரின் சர்க்கிள் அருகே தோட்டப்பாளையம் செல்லும் வழியில் சேகர் என்பவர் மருந்துக்கடை ஒன்று நடத்தி வருகிறார். வழக்கமாக சேகர் 10 மணியளவில் வியாபாரம் முடிந்த கையோடு  கடையை பூட்டிவிட்டு செல்வார். அதேபோல் சம்பத்தன்று இரவு சேகர் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.
 
இந்நிலையில், மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், ஷட்டர் சிறிதளவு திறந்திருப்பதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்கும், வடக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடை உரிமையாளர் மற்றும் போலீசார்   ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது, கடையில் இருந்த பணமும், எந்த வித பொருளும் திருடு போகவில்லை என்பது தெரியவந்தது. இதனிடையே போலீசார் கடையின் வெளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது கேமராவை வேறு பக்கம் திசை திருப்பிவிட்டு திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இது தொடர்பாக  காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வடக்கு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கடைகளில் பூட்டை உடைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட  மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.