அயன் பட பாணியில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரை...! கென்யா நாட்டு பெண் கைது...!

அயன் பட பாணியில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரை...! கென்யா நாட்டு பெண் கைது...!

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர், கென்யா நாட்டை சேர்ந்த 30 வயது பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்த போது மருத்துவ விசாவில் சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். 

இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் அந்த பெண்னிடம் கேட்ட போது வயிற்று வலி என கூறினார். ஆனால் அவரிடம் மருத்துவ சிகிச்சைக்கான சான்றுகள் இல்லாததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக அவரை எக்ஸ்ரே எடுத்த போது வயிற்றில் மாத்திரைகள் அதிகமாக இருப்பதை கண்டு பிடித்தனர். அவரை மருத்துவமனையில் அனுமதித்து இனிமா கொடுத்து வயிற்றில் இருந்து 90 மாத்திரைகள் எடுத்தனர். இந்த மாத்திரைகளில் விலையுயர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 6 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள 902 கிராம் போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.

இவற்றை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், யாருக்காக கடத்தி வந்தார், இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார், சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா, சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார் என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

சென்னை விமான நிலையத்தில், கடந்த 3  மாதங்களில் இதுவரை ரூ.130 கோடி மதிப்புள்ள கோக்கைன், ஹெராயின் பிடிப்பட்டு வெனிசூலா, அங்கோலா, தான்சானியா நாட்டு பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : 6 மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டம்...ஏன் தமிழ்நாட்டில் மட்டும் நிறைவேற வாய்ப்பு இல்லை? கேள்வி எழுப்பும் சீமான்...!