பிடிபட்ட பிரபல ரவுடி...! சுற்றி வளைத்து பிடித்த போலீசார்...!

பிடிபட்ட பிரபல ரவுடி...! சுற்றி வளைத்து பிடித்த போலீசார்...!

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்த ராஜா (எ) டொக்கான் ராஜா(44) மயிலாப்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாவார். பிரபல ரவுடியும் கூலிப்படை கும்பலின் தலைவனுமான சிடி மணியின் கூட்டாளிகளுள் ஒருவரான டொக்கான் ராஜா மீது கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல், வழிப்பறி உட்பட 25-க்கும் மேற்பட்ட  குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

கடந்த ஆண்டு இறுதியில் அவர் மீதான வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று வெளியே வந்த டொக்கான் ராஜா, அதன் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த டொக்கான் ராஜா துரைப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருப்பதாக ரவுடிகள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அங்கு சென்ற போலீசார் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த டொக்கான் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ரவுடி ராஜா (எ) டொக்கான் ராஜாவை ரவுடிகள் தடுப்புப் பிரிவு போலீசார் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் டொக்கான் ராஜாவிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். ரவுடி டொக்கான் ராஜா கடந்த ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்து மாநில இளைஞரணி துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பில்கிஸ் பானுவின் மனு தள்ளுபடி..!