விருகம்பாக்கம் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது...38 சவரன் தங்கம், 43 கிலோ வெள்ளி பறிமுதல்!

விருகம்பாக்கம் கொள்ளை  வழக்கில் ஒருவர் கைது...38 சவரன் தங்கம், 43 கிலோ வெள்ளி பறிமுதல்!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த போட்டோ லேப் உரிமையாளர் சந்தோஷ்குமார் வீட்டில் 66  சவரன் தங்க நகைகள், 80 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 13 லட்சத்து 50 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இதையும் படிக்க : அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 38 சவரன் தங்க நகைகள் 43 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 62 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர கூடுதல் ஆணையர் அன்பு, கைது செய்யப்பட்ட ஒருவர் மட்டுமே கொள்ளைச் சம்பவத்தில்  ஈடுபட்டதாகவும் இவர் மீது நொளம்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதாகவும் கூறினார்.




கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் தெரியவந்துள்ளதாகவும் அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.