நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு: தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி!

சென்னையில் குடிபோதை காரணமாக நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்ய முயன்ற நபரின், கத்தியை பிடுங்கி அவரையே வெட்டிவிட்டு, தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு:  தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி!

சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஞாயவிலைக் கடையின் பின்புறம் கடந்த 8 ஆம் தேதி அஜய் (எ) பம்பு (24) மற்றும் அவரது நண்பன் சந்தோஷ் (22) ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில் திடீரென அஜய் தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷை வெட்டியுள்ளார். சுதாரித்து கொண்ட சந்தோஷ் அஜய்-ன் கையில் இருந்த கத்தியைப் பிடுங்கி அஜய்-ஐ சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி சம்பவம் குறித்து தனது நண்பரான சேகரிடம் சந்தோஷ் தெரிவித்தார்.

இதனையடுத்து படுகாயமடைந்த அஜய்-ஐ அருகிலிருந்த அவரது உறவினர்கள் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கும் போது சந்தோஷின் நண்பரான சேகர் கோபத்தில் பெரிய கல்லை எடுத்து வந்து உயிருக்கு போராடி வந்த அஜயின் தலை மற்றும் முதுகில் போட்டு அவரைக் கொல்ல முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அஜய்-ஐ அருகிலிருந்த நபர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் அஜய் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அஜய்-ஐ கொலை செய்ய முயன்ற சந்தோஷ் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நண்பனை தாக்கி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயலும் வீடியோக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.