பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது... 14 நாள் நீதிமன்ற காவல்!!

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது... 14 நாள் நீதிமன்ற காவல்!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக,  பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர்  கைது செய்யப்பட்ட நிலையில்,  அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை கேகே நகரில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன். கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்ததால், ஆன்லைனில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த பள்ளி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்திய வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், அறை நிர்வாண உடையில் வந்து வகுப்பு எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது மாணவிகளுக்கு தனியாக செல்போன்களில் குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் மாணவிகளை தியேட்டருக்கு அழைப்பது, அவர்களை வர்ணிப்பது,  ஆபாச வீடியோ லிங்க் அனுப்புவது என தகாத வேலையில் ஈடுபட்டுள்ளார். 

இந்த குறுஞ்செய்திகளை அடங்கிய ஸ்கிரீன் ஷாட் படங்கள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு எதிராக எம்.பி. கனிமொழி, பாமக தலைவர் ராமதாஸ், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், சின்மயி, குஷ்பு உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாது அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக பள்ளி வளாகத்திற்கு நேரில் விசாரிக்கச் சென்ற பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மற்றும் காவல் துறையினருக்கு போதிய ஒத்துழைப்பை பள்ளி நிர்வாகம் அளிக்கவில்லை என கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து மடிப்பாக்கத்தில் இருந்த ஆசிரியர் உடனடியாக நேற்று மாலையே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் ஒரு மாணவியும் அந்த ஆசிரியர் மீது புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார் ராஜகோபாலனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

கைதான ராஜகோபாலனை வடபழனி காவல் நிலையத்தில் வைத்தும்,  அசோக் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்றும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. துணை ஆணையர்கள் ஜெயலட்சுமி, ஹரிஹரன் உள்ளிட்டோர் ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரின் கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, ராஜகோபாலனின் மனைவி மற்றும் தாயாரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் விசாரணைக்கு பின் ராஜகோபாலன், விருகம்பாக்கம் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி 14 நாள் நீதிமன்ற காவல் அதாவது ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.