லஞ்ச ஒழிப்பு துறை ஆவணங்களை ED-க்கு வழங்க நீதிமன்றத்தில் மனு!

லஞ்ச ஒழிப்பு துறை ஆவணங்களை ED-க்கு வழங்க நீதிமன்றத்தில் மனு!

லஞ்ச ஒழிப்பு துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத் துறையிடம் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆர்.கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1964ம் ஆண்டு முதல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை, ஊழலுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும், கடந்த 2020-21ம் ஆண்டில் மட்டும் 553 வழக்குகளை லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உதவுவதற்காக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்யும் வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இதில் பல வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை கிடைக்காததால் அமலாக்க துறையால் வழக்கு தொடர்ந்து நடத்த முடியாத நிலை உள்ளதால், லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகள், சேகரிக்கும் ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி P.D.ஆதிகேசவலு அமர்வு, தமிழக அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தது.

இதையும் படிக்க:பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் உயிரிழப்பு!