ஒரு நாளுக்கு 6 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு- டெல்லி போலீஸ்:
இந்திய தலைநகர் டெல்லியில், ஒரு நாளுக்கு சுமார் ஆறு பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 1,100க்கும் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தலைநகர் டெல்லி, எதற்கு முன்னொடியாக இருக்கிறதோ இல்லையோ, பெண்களுக்கான பாதுகாப்பின்மை பல ஆண்டுகளாக முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல், உலகையே உலுக்கிய நிர்பயா, ஜோதி சிங் போன்ற பல வழக்குகள் இன்றும் நம் கண்களில் மரண பயத்தைக் காட்டுகிறது. இந்நிலையில், தற்போது டெல்லி போலீஸ் வெளியிட்ட அறிக்கை, மேலும் ஒரு பெரிய பயத்தை அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
தொடரும் தொந்தரவுகள்:
டெல்லி போலீஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டில் மட்டும் பாலியல் வன்புணர்வு வழக்குகள் 6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பாலையல் தொந்தரவு மற்றும் வன்கொடுமை வழக்குகள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது, கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 15 வரை, சுமார் 1,244 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு, 1,480 வழக்குகள் வன்கொடுமை செய்யப்படுவதாகவும், பாலியல் தொந்தரவு செய்யப்படுவதாகவும் புகாரளித்துன்னர்.
சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை:
மேலும், சிறுமிகளையும், மகளிரையும் கடத்தும் வழக்குகள் அதிகமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 20 சதவீதம் அதிகரித்து, சுமார் 2,197 பெண்களைக் கடத்திய வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், பெரும்பானமியான வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிமுகமானவர்களாகவே இருப்பதுதான் கொடூரமாக இருக்கிறது.
கொரோனாக்கு முன், கொரோனாக்கு பின்:
இந்த கொரோனா தடுப்புகள் தளர்த்தப்பட்டதையடுத்து, பாலியல் வன்புணர்வு வழக்குகள் முன்பை விட அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏன் என்றால், பாலியல் வன்புணர்வு வழக்குகள், கடந்த ஆனு, சுமார் 2,096 வழக்குகள் பதிவாகிய நிலையில், இந்த ஆண்டு, 2,704 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், குடும்ப தகராறு வழக்குகளும் அடங்குவதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்பு வெளியிடப்பட்ட அறிக்கைகளில், 1.22 சதவீத பாலியல் வன்புணர்வு வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததை அடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்ட 7-8 நாட்களிலேயே, 60 சதவீத குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டு முதல், இந்த ஆண்டு ஜூலை 15 வரை, 95 சதவீத வழக்குகளில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் என்ன கூறுகிறது?
டெல்லி காவல் துறையின், செய்தி தொடர்பாளர் சுமன் நல்வா, இது குறித்து பேசுகையில், இது போன்ற குற்றங்கள், கிரிமினல் மற்றும் சமூக குற்றங்கள் எனக் குறிப்பிடுகிறார். மேலும், இது குறித்த நடவடிக்கைகள் எடுக்க, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர உதவி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெரும்பான்மையான வழக்குகள், மறைமுகமாக நடப்பதால், புகார்கள் எழுந்த பிறகு தான் குற்றங்கள் குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன என்றும் தெரிவித்த நல்வா, பெண்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்த காலம் முதல், தற்போது தங்களுக்கு நடக்கும் அநியாயங்களை எதிர்த்து போராட தயாராகி வரும் குடிமக்கள் மத்தியில் நாம் வாழ்வது ஒரு விதத்தில் பெருமை தந்தாலும், குற்ற அளவு குறையாமல் இருக்கும் நிலை, அவல நிலையாகவே பார்க்கபடுகிறது.