குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மீரா மீதுனின் காதலன் அபிஷேக் ஷியாமையும் கைது செய்த காவல்துறை...

மீரா மீதுன் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது ஆண் நண்பரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்

குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மீரா மீதுனின் காதலன் அபிஷேக் ஷியாமையும் கைது செய்த காவல்துறை...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை  பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கடந்த 7-ம்தேதி வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நடிகை மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கு உரிய விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் அன்றைய தினமே தன்னை யாராலும் கைது செய்ய முடியாது எனவும், அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப் போல் நானும் இருப்பேன் எனப் பேசினார். முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விட்டு நடிகை மீரா மிதுன் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில்  மீரா மிதுன் அவருடைய ஆண் நண்பருடன் பதுங்கி இருப்பது தெரிந்ததையடுத்து போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அப்போது கைது செய்ய வந்த போலீசாருடன் நடிகை மீரா மிதுன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

செல்போனை போலீசார் பறிமுதல் செய்ய முயன்ற போது ,தன்னை கொடுமைபடுத்துவதாக கூறி மீரா மிதுனே வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலை தளத்தில் பரப்பினார். அதன்பிறகு போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனாலும் மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீரா மிதுனை கைது செய்தபோது அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் அதே வாகனத்தில் அழைத்து வந்தனர். 

ஆனாலும் போலீஸ் வாகத்திலேயே மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் தமிழ்நாடு எல்லைக்கு வந்தபோது உதவிக்கு கோவை மாவட்ட பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பெண் போலீசாரின் உதவியோடு கைதான மீரா மிதுனை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு கொண்டு வரப்பட்டார். 24 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டதால் டிராண்சிட் வாரண்டு பெறவில்லை என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு 4 வது நுழைவுவாயில் வழியாக உள்ளே கொண்டு வந்தபோது ஊடகங்கள் காட்சிகளை பதிவு செய்தனர். 

அப்போது மீரா மிதுன், தன்னுடைய கையை போலீசார் உடைக்க முயன்றதாகவும் போலீசார் கொடுமை படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்கவில்லை என்றும்" சத்தமிட்டபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு முதல் தளத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீசாருடன்  வாக்குவாதம் செய்து வந்தார். வாக்குமூலம் கொடுக்க மாட்டேன் என வாக்குவாதத்தால் முதல் தளம் முழுவதும் மீரா மிதுனின் சத்தமாக இருந்தது. தனது வழகறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனனர். விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவருடைய நண்பர் அபிஷேக் ஷியாமையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மீராமீதுன் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக வந்த புகாரை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.