குலுக்கல் பரிசு... 14 லட்சத்தை இழந்த அர்ச்சகர்!!

குலுக்கல் பரிசு... 14 லட்சத்தை இழந்த அர்ச்சகர்!!

குலுக்கல் முறையில் பைக்,கார்கள் பரிசு என ஆசை காட்டி கோவில் அர்ச்சகரிடம் 14 லட்ச ரூபாயை ஏமாற்றிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியை சேர்ந்த கோவில் அர்ச்சகர் ராமசுந்தரம் என்பவரிடம் ஒரு கும்பல் குலுக்கல் முறையில் பைக்,கார்கள் பரிசு தருவதாக கூறி 14 லட்சம ரூபாய் மோசடி செய்துள்ளனர்.  இந்த வழக்கு தொடர்பாக முத்துக்குமார், முனிரத்தனம், மருதுபாண்டியன் ஆகிய 3 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ராமசுந்தரம் (40) என்பவர் கோவில்பட்டியில் உள்ள 4 கோவில்களில் அர்ச்சகராக இருந்து வருகிறார்.  மேலும் இடையில் துபாயிலும் பணிபுரிந்துள்ளார்.  கடந்த 2018ம் ஆண்டு இலுப்பையூரனி பகுதிக்கு ஆம்னி வேனில் வந்த நபர்கள் குலுக்கல் முறையில் பரிசு என்று கூறி விளம்பரம் செய்துள்ளனர்.  அப்போது அவர்கள் கொடுத்த பேப்பரை ராமசுந்தரம் வாங்கி சுரண்டிய போது அவருக்கு பரிசு கிடைத்துள்ளது.  

நீங்கள் எங்களிடம் ரூ 5 ஆயிரத்திறக்கு மெத்தை, தலையணை, ஃபேன் வாங்கினால் குலுக்கல் முறையில் உங்களுக்கு பரிசு விழும் என்று கூறியதால் ராமசுந்தரமும் 5 ஆயிரம் கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளார்.  மேலும் செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார்.

இதையெடுத்து சில நாள்கள் கழித்து சூர்யா ஹோம் அப்ளைன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று ராமசுந்தரத்தினை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த கும்பல் குலுக்கலில் உள்ளது பைக் பரிசு விழுந்துள்ளது.  பல காரணங்களை கூறி அவைகளுக்கு முன்பணம், வருமானவரி போன்றவை செலுத்த வேண்டியுள்ளது என கூறி 14 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தினை கேட்டுள்ளனர். 

ராமசுந்தரமும் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார்.  அதன் பின்னர் உங்களுக்கு கார் தர எங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.  5 லட்ச ரூபாய் செலுத்தினால் கார் உங்கள் வீட்டிற்கு வந்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.  இதனை நம்பி ராமசுந்தரம் 5 லட்ச ரூபாய் பணத்தினை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.  இதன்பின்னர் சில தினங்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட அந்த கும்பல் உங்கள் தயராகி விட்டது.  ஆனால் நிறுவனம் உங்களுக்கு 2 கார்களை தர முடிவு செய்துள்ளதாகவும், மேலும் 5 லட்சம் தரும்படி கேட்டுள்ளனர்.  சற்று தயக்கம் காட்டிய ராமசுந்தரம் ஒரு கார் போதும் என்று தெரிவித்துள்ளார்.  இருந்த போதிலும் 2 கார் தான் தரமுடியும், ஒரு கார் என்றால் முடியாது என்று தெரிவித்துள்ளனர்.  

இதையெடுத்து வேறு வழியில்லமால் ராமசுந்தரம், தனது பெற்றோர் மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரரிடம் பணத்தினை பெற்று அனுப்பி வைத்துள்ளார்.  அது மட்டுமல்ல கார்களை கொண்டு வருவதற்கு செலவு என்று கூறி தொடர்ந்து ராமசுந்தரத்திடம் பணத்தினை கறந்துள்ளனர்.  ராமசுந்தரம் பண தர மறுத்தால், ஒட்டு மொத்த பணமும் கிடைக்காது என்று மிரட்டியதால் வேறு வழியின்றி கொடுத்துள்ளார்.  14 லட்சத்து 28 ஆயிரத்து 660 ரூபாய் கொடுத்த நிலையில் திடீரென அந்த கும்பல் அனைத்தையும் தொடர்பு கொள்ள முடியிவில்லை என்றதும் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் ராமசுந்தரம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.  போலீசார் புகாரை எடுக்க மறுக்கவே கடந்த ஆண்டு சைபர்க்ரைமில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகரன் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.  

இது தொடர்பாக தூத்துக்குடி கோரம்பள்ளம் சவேரியார்புரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துகுமார் (37) என்பவரை சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வைத்து கைது செய்து அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் மோசடியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் புல்லலங்கோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் முனிரத்னம் (36) என்பவரை அவரது வீட்டின் முன்பு வைத்தும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் மருதுபாண்டியன் (38) என்பவரை சங்கரன்கோவிலில் வைத்தும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்த 13 செல்போன்கள், 2 லேப்டாப், ஒரு டேப், ஒரு ஹார்டு டிஸ்க், 5 டெபிட் கார்டுகள், ரொக்கப்பணம் ரூ.20ஆயிரத்தை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.4ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இவ்வழக்கில் கைதான முத்துகுமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி சைபர்குற்ற பிரிவு காவல் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கில் சம்மந்தப்பட்டு இருந்ததால் அந்த வழக்கிலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இவ்வழக்கு குறித்து சைபர் குற்ற பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து 3 எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இதையும் படிக்க:   ஆன்லைன் ரம்மி... சிபிசிஐடி நோட்டீஸ்... இடைக்கால உத்தரவு?!!