சிவசங்கர் பாபா வழக்கு: மாணவி காணொலி மூலம் வாக்குமூலம் அளிக்க உத்தரவு!!

சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல் தொல்லை புகாரளித்த முன்னாள் மாணவி ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலி மூலம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்தபோது, அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் மாணவி ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபா தரப்பில் புகார் அளித்த மாணவி ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், மின்னஞ்சல் மூலமாக புகாரளித்ததாக கூறப்படும் நிலையில், புகாரின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த முன்னாள் மாணவியை, சிபிசிஐடி காவல்துறையினர், காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அந்த பெண், சிவசங்கர் பாபா மிகவும் செல்வாக்கானவர் என்பதால் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு வந்து நேரில் ஆஜராக இயலாது என்றும், காணொளி வாயிலாக எப்போது வேண்டுமானாலும் வாக்குமூலம் கொடுக்க தயாராக இருப்பதால் அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு கொண்டார்.

இதையேற்ற நீதிபதி, வாக்குமூலத்தை பெறுவதற்கான தேதியை செங்கல்பட்டு நீதிமன்றம் முடிவு செய்து, காணொளி வாயிலாக முன்னாள் மாணவியை ஆஜராக சொல்லி, வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.

மேலும் மாணவியின் வாக்குமூலம் நிறைவுபெற்ற பிறகு, சிவசங்கர் பாபாவின் மனுவை விசாரணை எடுத்து கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்

இதையும் படிக்க || "விற்பனையாகாத சுமார் 4 ஆயிரம் வீடுகள், வாடகைக்கு விடப்படும்" அமைச்சர் முத்துச்சாமி!!