
சென்னை: தாம்பரம் அடுத்த மெப்ஸ் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்று இரவு 4 பேர் கொண்ட கும்பல் அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுக்கும் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் டெல்லியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை தகவல் சென்றுள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சடைந்த வங்கி ஊழியர்கள் இது குறித்து உடனடியாக தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் கையில் சுத்தி மற்றும் உளி ஆகிய பொருட்களுடன் நடந்து சென்ற நான்கு பேரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் சீர்காழியை சேர்ந்த ராஜேஷ்குமார்(22), பொத்தேரி பகுதியைச் சேர்ந்த அன்பழகன்(19), மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (20),சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(20) என தெரியவந்தது.
மேலும் படிக்க | 4 பேர், 22 செல்போன்கள்! திருடர்களைப் பிடித்த காவலர்கள்!
மேலும் நான்கு பேரும் கஞ்சாவை புகைத்து விட்டு மீண்டும் நாளை கஞ்சா வாங்குவதற்கு பணம் தேவை என்பதால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளை மூயற்ச்சில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.