டெல்லியில் உடல் கருகிய நிலையில் தமிழக இளம்பெண் சடலம் மீட்பு... கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு...
கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளம்பெண், டெல்லியில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது, உறவினர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் குடும்பத்துடன் டெல்லியில் உள்ள ஜல் விகாரில் தங்கி, லாஜ்பத் நகரில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இன்று காலை அவர், லாஜ்பத் மார்க்கெட் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் லட்சுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் உறவினர்கள், லட்சுமி பணியாற்றிய அழகு நிலைய உரிமையாளர்கள் தான் எரித்து கொலை செய்திருக்க வேண்டும் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனிடையே உடல் கண்டெடுக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் இணை ஆணையர் ஈசா பாண்டே நடத்திய விசாரணையில் குளியலறையில் மின்சாரம் தாக்கி லட்சுமி உயிரிழந்து உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.