மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய இளைஞர்... தட்டிக்கேட்ட தந்தை... ஆத்திரத்தில் பாட்டிலை உடைத்து குத்திய வாலிபர்!

மகளை காதலிக்க சொல்லி வற்புறுத்திய இளைஞரை தட்டிக்கேட்ட தந்தையை ஆத்திரத்தில் பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய இளைஞர்... தட்டிக்கேட்ட தந்தை... ஆத்திரத்தில் பாட்டிலை உடைத்து குத்திய வாலிபர்!

திருச்சி முடுக்குப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் நாகராஜ். இவர் பொன்மலைப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் இடையில் வழிமறித்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி நாகராஜின் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி மாணவி பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பியபோது, நாகராஜ் ஆட்டோவுக்குள் கையை விட்டு மாணவியை பயமுறுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி, இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்த நாளே மாணவியின் பெற்றோர் நாகராஜின் வீட்டிற்கு சென்று, நடந்த சம்பவம் குறித்து நாகராஜின் பெற்றோரிடம் விவரித்து தட்டிக்கேட்டுள்ளனர். மாணவியின் பெற்றோர் வீட்டிற்கு வந்ததால் ஆத்திரமடைந்த நாகராஜ், அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து மாணவியின் தந்தையின் கையில் குத்திவிட்டு தப்பிஓடியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவியின் தந்தையை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து பாட்டிலால் குத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.