கேரளத்தை உலுக்கிய வரதட்சணை கொலை,..100 பவுன் நகை,1 ஏக்கர் நிலம் கொடுத்தும் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்,.வெளியான புகைப்படங்கள்.!
வரதட்சணை கொடுமையால் மனைவியை அடித்து உதைத்து கொலை செய்த கணவரின் செயல் கேரளத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்மயா. இவருக்கும் கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த எஸ் கிரண் குமாருக்கும் கடந்த ஆண்டு மார்ச்சில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் கிரண் குடும்பத்தினருக்கு 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம் மற்றும் 1 டொயோட்டா கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் மிகவும் மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் வாழ்க்கையில் நாள் செல்ல செல்ல புயல் வீசத் தொடங்கியுள்ளது. வீட்டிலிருந்து 10 லட்சம் வாங்கி வா, 20 லட்சம் வாங்கி வா என்று கிரண் விஸ்மயாவை அடித்துக் கொடுமை படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து அடித்தும் உதைத்தும் வந்துள்ளார்.
கணவன் தானே, சில நாட்களில் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்பி ஆரம்பத்தில் விஸ்மயாவும் அமைதியாக இருந்துள்ளார். ஆனால் நாள் செல்ல செல்ல ஆணியால் முகத்தில் தாக்கியும், கட்டையால் அடித்தும் கொடுமை படுத்தியுள்ளார். மேலும் விஸ்மயாவின் பெற்றோர் முன்னிலையிலேயே அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஸ்மயாவின் பெற்றோர் கிரண் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க அதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டார். இதன் பின் இரு வீட்டாரும் சமரசமாக போகலாம் என்று கூறியதால் அவர் மீதான வழக்கை விஸ்மயா பெற்றோர் திரும்பப் பெற்றுள்ளனர். ஆனால் கணவர் வீட்டுக்கு செல்ல மறுத்து பெற்றோர் வீட்டிலேயே விஸ்மயா இருந்துள்ளார். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு படித்து வந்த விஸ்மயா தேர்வு எழுதச்சென்ற போது விஸ்மயாவை சமரசம் பேசி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் கிரண்.
இதன் பின்னால் ஒரு வாரம் அமைதியாக இருந்த கிரண் மீண்டும் மனைவி விஸ்மயாவை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை விஸ்மயா தனது சித்தப்பா மகனிடம் வாட்ஸ்அப் மூலம் 'எண்டே மொகத்தில் சவட்டி.. ஒத்திரி அடிச்சு (என் முகத்தில் உதைக்கிறார்.. அதிகமாக அடிச்சிட்டார்)' என்று கூறி புலம்பியுள்ளார். மேலும் கணவரால் மோசமாக தாக்கப்பட்ட புகைப்படங்களையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் மர்மமான முறையில் கணவர் வீட்டில் விஸ்மயா இறந்து கிடந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் விஸ்மயாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகாரில் தங்கள் மகள் கணவரால் கொடுமைப்படுத்தி, கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளனர். மேலும் காவல்துறையினரும் இதை வரதட்சணை கொடுமை கொலையாக வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவமும், விஸ்மயா தனது சித்தப்பா மகனுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் உரையாடல் மற்றும் புகைப்படங்களும் வெளியாகி கேரளத்தையே உலுக்கி வருகிறது. கணவர் கிரண் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.