ஆசிரியரை தாக்கிய மாணவரின் குடும்பம்... அனைவரையும் கைது செய்ய போராட்டம்...

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியரை தாக்கிய மாணவரின் குடும்பம்...  அனைவரையும் கைது செய்ய போராட்டம்...

தூத்துக்குடி | தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரின் மகன் 38 வயதான பாரத். இவர் எட்டையாபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் பாரத் கடந்த 21-ம் தேதி இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் இருந்துள்ளார். எனவே, பாரத் அவரை முன்னால் வந்து உட்காரும் படி கூறியுள்ளார். அப்போது, அந்த மாணவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கடந்த 21ம் தேதி, அந்த மாணவனின் பாட்டியான கீழநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்த 53 வயதான முனியசாமி என்பவரது மனைவி மாரி செல்வி என்பவர் ஆசிரியர் பாரத்தை சத்தம் போட்டுச் சென்றுள்ளார்.

மேலும், அன்று மதியமே ஆசிரியர் பாரத் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த மாணவனின் பெற்றோரான சிவலிங்கம் (34), செல்வி (28) மற்றும் தாத்தா முனியசாமி (53), முனியசாமியின் மனைவி மாரிச்செல்வி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் பாரத்தை தவறாக பேசி பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியரை ஓடஓட விரட்டி கை மற்றும் கம்பால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவமானது சமுக வளைதலங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் இது குறித்து ஆசிரியர் பாரத் அளித்த புகாரின் பேரில் எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் எட்டையபுரம் காவல்நிலைய போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியரை தாக்கிய நபர்கள் மீது 5- பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் முனியசாமி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மாணவனின் பாட்டி மாரி செல்வியை இதுவரை கைது செய்யவில்லை என்றும் அதை போல் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் மனைவி செல்வி-யை நேற்று வெளியே விட்டு விட்டதாகவும் கேட்டால் ஜாமினில் வெளியில் வந்துள்ளதாக கூறுவதாக கூறப்படுகிறது.

ஆனால், தெலுங்கு வருடப்பிறப்பு நாள் விடுமுறையான நேற்று எப்படி ஜாமீன் வழங்கினார்கள் என கீழநம்பியாபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளி ஆசிரியரை தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com