எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம்...ஆத்திரத்தில் மருமகனை கழுத்தறுத்து கொலை செய்த மாமனார்!

எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம்...ஆத்திரத்தில் மருமகனை கழுத்தறுத்து கொலை செய்த மாமனார்!

கிருஷ்ணகிரி அருகே  மகளை காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனை மாமனார் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன், இவரும் முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த  சரண்யாவும் காதலித்து வந்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் ஜெகனின் பெற்றோர் இருவரையும் ஏற்று கொண்ட நிலையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டம் குறித்த சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு! மத்திய அரசு ஒப்புதல்!!

இந்நிலையில் இன்று டைல்ஸ் வேலை செய்து வந்த ஜெகன் வழக்கம் போல் வேலைக்கு சென்றபோது, காவேரி பட்டினம் அருகே வழிமறித்த அவரது மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் ஜெகனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அங்கு கூடிய ஜெகனின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி  போலீசாரிடமும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து  காவல்துறையினர் சமாதானம் பேசி ஜெகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு  அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதனிடையே கொலையாளி சங்கர் அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையில் தனது மகளுக்கு நன்கு வசதியான இடத்தில் நிச்சயதார்த்தம் செய்த நிலையில்  தனக்கு  பிடிக்காதவரை  காதல் திருமணம் செய்து கொண்டதால்  ஆத்திரத்தில்  மருமகனை தீர்த்து கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.