மீண்டும் உருவெடுக்கும் பெண்சிசு கொலை!!பெற்றோர்கள் தலைமறைவு..

பெண்சிசு கொலையில் பெற்றோர்கள் தலைமறைவால் நீடிக்கும் மர்மம்....கொலையா? என போலீசார் விசாரணை...

மீண்டும் உருவெடுக்கும் பெண்சிசு கொலை!!பெற்றோர்கள் தலைமறைவு..

உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் தலைமறைவாக இருப்பதால் கொலையாக இருக்கலாம் என போலீசார் பெற்றோர்களை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 4 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பிறந்த 6-நாளே ஆன பெண் குழந்தை உடல்நல குறைவு காரணமாக கடந்த 26ஆம் தேதி காலையில் உயிரிழந்தாகவும், அந்த குழந்தையை யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த கிராம செவிலியர் குழந்தையை கேட்டபோது அவரிடம் முன்னுக்கு பின் முரணான பதில்களை பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கிராம செவிலியர் இது குறித்து விஏஓ விடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஏஓ முணியாண்டி பெற்றோரிடம் விசாரிக்கும் போது முறையான பதில் வராததால்  இந்த சம்பவம் தொடர்பாக சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார் முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதியரின் வீட்டிற்கு சென்ற போது பெற்றோர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் தலைமறைவாக இருப்பதால் பெண்சிசு உயிரிழந்தது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் பெற்றோர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், உசிலம்பட்டி பகுதியில் போதிய விழிப்புணர்வு இருந்தும் மீண்டும் மீண்டும் பெண்சிசு கொலை அரங்கேறியிருவதால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.