
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பிள்ளையார் கோயில் தெருவில் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சண்டை போட்டு தொந்தரவு செய்து வந்த கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜராம் (45). இவருடைய மனைவி ரேவதி (36). இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 மற்றும் 9 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ராஜராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து ராஜாராம் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராமின் மனைவி ரேவதி அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் ராஜாராம் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜாராம் ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா போலீசார் உயிரிழந்த ராஜாராமின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ரேவதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.