ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்...! போலீசார் விசாரணை..!

திருச்சியில் இளைஞர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் மரணம்...

ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்...! போலீசார் விசாரணை..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் விராலிமலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துளார். நேற்று வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருடைய உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணமூர்த்தி நகர் என்ற இடத்தில் பழைய கல் குவாரி செல்லும் வழியில் முட்புதர்களுக்கிடையே இளைஞர் ஒருவர், தலை மற்றும் காது பகுதியில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து  கே.கே.நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் மண்ணச்சநல்லூர் சீதாலெட்சுமி நகரை சேர்ந்த பாஸ்கர் (29) என்பது தெரிய வந்தது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணை மேற்கொண்டார்.  

மேலும் இளைஞரின் உடல் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில்  ரத்த கறை படிந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.