வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு..

ஆம்பூர் அருகே வீட்டின் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த  இளைஞர் தலை மீது கல்லை போட்டு கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ரசாக் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு கௌரி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில் சிவக்குமார் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியபட்டு ஆம்பூர் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்காரணமாகவே சிவக்குமாரின் மனைவி மூன்று ஆண்டுகள் அவரை  விட்டு பிரிந்து குழந்தைகளுடன் நாச்சார்குப்பம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெரியாங்குப்பம் பகுதியிலுள்ள தனது சொந்த  வீட்டின் முன், திண்ணையில்  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிவக்குமாரை, அங்கு வந்த  மர்மநபர்கள் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு  தப்பி சென்றுள்ளனர்.

அதன்பின்னர் அதிகாலையில் வீட்டின் கதவை திறந்து பார்த்த தாய் ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் இறந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். பின்னர்  அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்த நபர் முன்விரோத காரணமாக எதிரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா ?அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்