"வேலுமணி மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை" உயர்நீதி மன்றம்!

"வேலுமணி மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை" உயர்நீதி மன்றம்!

சென்னை மாநகராட்சியில்  நடைபெற்ற டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு  அதிமுக ஆட்சியின்போது அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில், சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலை மறு சீரமைப்பு, மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கான 37 டெண்டர் ஒதுக்கீடு நடைபெற்றதாகவும், சுமார் 300 கோடி மதிப்பில் 3800 சாலைகள் மறு சீ்ரமைப்பு மற்றும் 290 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகளுக்கான இந்த டெண்டரில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவித்திருந்தது.
  
ஒரே ஐபி முகவரியிலிருந்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த டெண்டர்கள் ஒதுக்கீடு செய்வது  செய்யப்பட்டதாகவும், இந்த முறைகேட்டில் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி , அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த முறைகேட்டின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களின் பணம் சுரண்டப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தது. மேலும், இந்த முறைகேடுகள் குறித்து உரிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டு விட்டது என்றும், ஏற்கனவே இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து உயர்நீதிமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாற்றி அமைக்கப்படுவதாகவும், அரசு  சட்டத்திற்கு உட்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்றும், மேலும், அரசுக்கு அனைத்து அதிகாரங்கள் உள்ளது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிக்க:குழந்தைகளின் எதிர்காலம் வீணாவதை அரசு வேடிக்கை பார்க்கின்றதா? :ஆவின் விவகாரம்!