ரவுடியாக கெத்து காட்ட வாகன கண்ணாடியை உடைத்தவர்கள்... 12 மணி நேரத்தில் கைது செய்து கெத்து காட்டிய போலீஸ்...

ரவுடியாக தங்களை அடையாளப்படுத்தி கெத்துக்காட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய 3 பேரை 12 மணி நேரத்திற்குள் கைது செய்து போலீசார் கெத்து காட்டியுள்ளனர்.

ரவுடியாக கெத்து காட்ட வாகன கண்ணாடியை உடைத்தவர்கள்... 12 மணி நேரத்தில் கைது செய்து கெத்து காட்டிய போலீஸ்...

சென்னை கே.கே நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சுற்றிய 3 பேர் கொண்ட கும்பல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அடித்து நொறுக்கியது. அதுமட்டுமல்லாமல் இதே கும்பல் வளசரவாக்கம் பகுதியில் ஒரு பால் விநியோகம் செய்யும் நபர் மற்றும் ஒரு டெலிவரி பாய் ஆகியோரை கத்தியால் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தியாகராய நகர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் இச்சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். மேலும், சம்மந்தப்பட்ட காவல் எல்லைக்குள் நடைபெற்றச் சம்பவங்களை அந்தந்த பகுதி காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவங்கள் தொடர்பாக விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திருட்டு ராஜேஷ் மற்றும் ஆதி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கே.கே நகர் பகுதியில் வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், இருவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியது விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (எ) ஆஹா கார்த்திக், அரவிந்தன் (எ) பட்டானி அரவிந்தன் மற்றும் ஒரு 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து பதுங்கியிருந்த அம்மூவரையும் துரத்திப் பிடித்து தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தங்கள் பகுதியில் உள்ள ரவுடிகள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை ரவுடிகளாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பியதாகவும், அதன்படி கெத்துகாட்டுவதற்காக போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதாகவும் மூவரும் வாக்குமூலம் அளித்தனர்.  இதனையடுத்து மூவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறுவனை கெல்லிஸ் சீர்திருத்தப் பள்ளியிலும் மற்ற இருவரும் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.