கடையில் மாமூல் தராததால் வீட்டிற்கே வந்து மிரட்டல்... 2 நபர்களை கைது செய்தது போலீஸ்...

கோயம்பேடு அருகே, கத்தியைக்காட்டி மிரட்டி பெண்ணிடம் மாமூல் கேட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையில் மாமூல் தராததால் வீட்டிற்கே வந்து மிரட்டல்... 2 நபர்களை கைது செய்தது போலீஸ்...

கோயம்பேடு, நியூகாலனி, 10 வது தெருவை சேர்ந்தவர் லிங்கேஸ்வரி(50), இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மளிகை கடைக்கு வந்த இருவர் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு பணம் தராமல் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி விட்டு சென்றனர். பின்னர் இரவு மளிகை கடைக்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டியதை கண்டு பெண் அதிர்ச்சி அடைந்து பயந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த இரு வாலிபர்கள் வீட்டு கதவை தட்டி மிரட்டியவாறு தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து லிங்கேஸ்வரி கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கத்தியை வைத்து மிரட்டி தகராறில் ஈடுபட்ட இருவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்த ஜெயக்குமார்(26), இவரது கூட்டாளி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பொன்ராமகிருஷ்ணன்(23), என்பது தெரியவந்தது.

இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து இரண்டு பட்டாகத்திகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிபறி உள்ளிட்ட வழக்குகளும், பொன்ராமகிருஷ்ணன் மீது வழிபறி உட்பட வழக்குள் இருப்பது குறிப்பிடதக்கது.