டூவீலரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது...  21 கிலோ கஞ்சா பறிமுதல்..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா, கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
டூவீலரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது...  21 கிலோ கஞ்சா பறிமுதல்..
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம்  மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள்  கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்  தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனையிட்டனர்.

மூட்டையில் 21 கிலோ கஞ்சா இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி சேர்ந்த ரெங்கநாதன்,  கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் தோப்புத்துறை சேர்ந்த ஹலித் என்பது தெரியவந்தது.

இவர்கள் வேதாரண்யத்தில் இருந்து நாகையில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com