பணத்தை பதுக்கி வைத்திருப்பது எங்கே..? மேட்ரிமோனி மோசடி வழக்கில் நைஜீரியர்களிடம் விசாரணை...

மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த பணத்தை பதுக்கி வைத்திருப்பது எங்கே? என போலீஸ் காவலில் எடுத்த நைஜீரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணத்தை பதுக்கி வைத்திருப்பது எங்கே..? மேட்ரிமோனி மோசடி வழக்கில் நைஜீரியர்களிடம் விசாரணை...

இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனியலில் பதிவு செய்த பெண்களை குறிவைத்து ஒரு கும்பல்  பணமோசடியில் ஈடுபடுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சுமார் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. குறிப்பாக போலியான பெயர் மற்றும் அடையாள அட்டையை காண்பித்து வெளிநாட்டில் மருத்துவராக பணிபுரிவதாகக் கூறி பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து டெல்லி சென்ற தனிப்படை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியார் குடியிருப்பில் பதுங்கி இருந்த நைஜீரியர்களான பாலினஸ் சிகேலுவோ, சிலிடஸ் கேஸ்சுக்வு ஆகிய இருவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இரு நைஜீரியர்கள் தொடர்ந்து தலைமறைவாகி இருந்து வருகின்றனர்.

இதனையடுத்து இந்த கும்பலிடம் பல பெண்கள் மோசடியில் சிக்கி இருப்பதால் நைஜீரியர்களை விசாரணை நடத்துவதற்காக நேற்று முந்தினம் 5 நாள் காவல் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் 3 நாள் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. போலீஸ் காவலில் எடுத்த நைஜீரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நைஜீரியர்கள் சாலையோரங்களில் வசிக்கும் நபர்களிடம் பணத்தை அளித்து அடையாள அட்டையின் நகலை பெற்று கொண்டு வங்கி கணக்கு உருவாக்கியது தெரியவந்தது.

மேலும் போலியான மேட்ரிமோனியல் வெப்சைட்டை உருவாக்கி இந்தியா முழுவதும் பல பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களிடம் பறித்த பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த சென்னையைச் சேர்ந்த பெண்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த கும்பலின் தலைவனாகவும் இவர்களின் திட்டங்களுக்கு மூளையாகவும் இருந்து செயல்படுவது யார்? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு மாநிலங்களில் இந்த மேட்ரிமோனியல் மோசடியில் சிக்கிய பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நைஜீரிய கும்பலில் இரண்டு பேர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் டெல்லியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டு டெல்லி போலீசாரின் உதவியுடன் அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸ் காவல் கடைசி நாளான இன்று இரு நைஜீரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.