கொள்ளையடிக்க கற்றுக் கொடுத்த யூடியூப்... ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் அதிர்ச்சி வாக்குமூலம்...

யூடியூப் மற்றும் இணையதளம் மூலம் கொள்ளையடிக்க கற்றுக்கொண்ட ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கொள்ளையடிக்க கற்றுக் கொடுத்த யூடியூப்... ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் அதிர்ச்சி வாக்குமூலம்...

வேலூர் தோட்டப்பாளையம் பகுதி காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கடந்த டிச 15ம் தேதி சுவற்றில் துளையிடப்பட்டு தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக்கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் ஸ்பிரே அடித்து நகைகளை திருடி சென்றதும், கொள்ளையன் முழுமையாக சிங்கம் உறுவத்துடன் கூடிய மாஸ்க் மற்றும் தலையில் விக் அணிந்து சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் தீவிர விசாரனைக்கு பிறகு கொள்ளையனை கண்டு பிடித்து அவனிடம் இருந்து நூறு விழுக்காடு நகைகளையும் மீட்டுள்ளது வேலூர் மாவட்ட காவல்துறை.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி. பாபு கூறுகையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து 5 நாட்களிலேயே குற்றவாளியை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட 8 கோடி மதிப்பிலான சுமார் 16 கிலோ தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் ஆகிய நகைகளை குற்றவாளியிடம் இருந்து மீட்டுள்ளனர். இதில் குறிப்பிடும்படியாக தனிப்படையினர் விஞ்ஞான பூர்வமாகவும் பழைய முறைகளை பின்பற்றியும் புலன் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான டீக்காராமன் என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை ஒடுகத்தூர் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை நேற்று மாலையில் அவரிடமிருந்து கைப்பற்றினோம். மேலும் இக்குற்றச் சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் மீது குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதற்கான இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நகைக்கடையில் அலாரம் இருந்தும் வேலை செய்யவில்லை. சிசிடிவி கேமிரா கடையினுள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததே தவிர கடையின் பின்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை. இது போன்ற மிகப் பெரிய நகைக் கடைகளில் நான்கு புறங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இது போன்ற அமைப்பில் சிசிடிவி கேமிரா இந்த கடையில் இல்லாத காரணத்தால் கொள்ளையன் எளிதில் பின்னே நுழைந்து உள்ளான். இது போன்ற குறைகளை கடை நிர்வாகத்திடம் கூறி உள்ளோம்.

கொத்தனாராக பணியாற்றி வரும் டீக்காராமன் 10 நாட்கள் திட்டமிட்டு மெது மெதுவாக துளையிட்டு, ஒவ்வொரு இரவும் வந்து பொறுமையாக துளையிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு காவலாளிகள் காவல் பணியில் இருந்தும் அவர்கள் பின் பகுதிக்குச் சென்று பார்ப்பதில்லை. இதனால் அந்த துளை அவர்கள் கண்களுக்கு படவில்லை.

இது குறித்து கூறிய காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன், கொள்ளையன் எந்த வழியாக தப்பித்து இருக்க முடியும் என்று நாங்கள் கணித்தோம். பிறகு எஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் இரவு, பகல் என 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள சுமார் 200 சிசிடிவி கேமிரா பதிவுகளை முழுமையாக அலசி ஆராய்ந்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக இருக்கக்கூடிய நபர்களை டிராக் செய்து குற்றவாளியை கண்டுபிடித்துள்ளோம் என்றார்.

கடையின் உள்ளே சென்று கொள்ளையடிப்பதற்கு பத்து நாட்கள் தொடர்ந்து மெதுமெதுவாக கடையின் பின்புறம் துளையிட்ட கொள்ளையன். சத்தமின்றி துளையிடுவது எப்படி? என்றும் இதற்கு முன் நடைபெற்ற பெரும் கொள்ளைகளில் என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்றும் ஆராய்ந்து அந்த தவறுகள் தான் கொள்ளை அடிக்கும் போது நிகழாத வண்ணம் இருப்பதற்காக யு டியூப்பில் உள்ள காணொலிகளை பார்த்து கற்றுக்கொண்டுள்ளான் என்றார்.