நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மஞ்சூர் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரியும் சரவணன் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஆசை காட்டி, பலமுறை வன்புணர்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், பின் ஏமாற்றிவிட்டதாகவும் மேல்குன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்காவலர் ஒருவர், கோவை ஐ ஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மஞ்சூர் காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு பெண் காவலர் தன்னுடன் பல மாதங்களாக திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார்.
மேலும், திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்காவலரிடம் உறுதி கூறியுள்ளார். இந்நிலையில் பல முறை திருமணம் செய்து கொள்ள பெண்காவலர் கேட்டும், அதனை தட்டிக் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே காவல் துறை ஐ ஜி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பெண்காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சரவணன் மீது வழக்கு தொடர்ந்த மேல் குன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காவல் சிறப்பு ஆய்வாளர் சரவணனை காவல் துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே சரவணனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.